நிஜ ‘லேடி’ கில்லாடி!… சிரித்துப் பேசிக்கொண்டே சீருடைக்குள் சொக்கத்தங்கத்தை சுருட்டிய விற்பனை பெண்… 1.66 கோடி அபேஸ்… பட்டப்பகலில் துணிகரத் திருட்டு…!!!

By Muthu Mani on வைகாசி 14, 2026

Spread the love

அகமதாபாத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் சுமார் 11 மாதங்களாக விற்பனையாளராகப் பணியாற்றி வந்த ஹர்ஷிதா ஷெட்டி என்பவர், தன் முதலாளியின் நம்பிக்கையைச் சிதைத்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில், உரிமையாளர் தனக்கு அவசர வேலை நிமித்தமாக விடுப்பு அளித்துள்ளதாக சக ஊழியர்களிடம் பொய் கூறிவிட்டு அவர் கடையிலிருந்து வெளியேறியுள்ளார். அன்று மாலை வழக்கமான கணக்கெடுப்பின் போது ஒரு தங்க பிரேஸ்லெட் காணாமல் போனதைக் கவனித்த ஊழியர்கள், உரிமையாளர் தர்ஷன்பாயிடம் இதுகுறித்து விசாரித்தபோதுதான் ஹர்ஷிதா யாரிடமும் சொல்லாமல் சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து கடையில் இருந்த நகைகளை முழுமையாகச் சோதனை செய்தபோது, சுமார் 1.66 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கச் சங்கிலிகள், மோதிரங்கள், தாலிகள், பதக்கங்கள், காதணிகள் மற்றும் கைக்கடிகாரங்கள் எனப் பெருமளவிலான ஆபரணங்கள் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த உரிமையாளர் உடனடியாக சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஹர்ஷிதா நைசாக நகைகளைத் தனது சீருடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு கடையை விட்டு வெளியேறும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தது.

   

இந்தத் துணிகரத் திருட்டு குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள ஹர்ஷிதாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருட்டுச் சம்பவம் அரங்கேறியது முதல் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். நீண்ட நாட்களாகப் பணியாற்றி வந்த ஊழியரே இவ்வளவு பெரிய தொகையிலான நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது அந்தப் பகுதியில் உள்ள இதர வியாபாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.