வயதான பெற்றோரை கவனிக்காமல் அலட்சியப்படுத்தும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 10% முதல் 15% வரை பிடித்தம் செய்யப்பட்டு, அந்தத் தொகை நேரடியாக பெற்றோரின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும் என தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதற்காக மாநில சட்டப்பேரவையில் விரைவில் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா 2026-ஆம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்களது பிள்ளைகள் அரசு வேலையில் சேர்ந்த பிறகு கைவிடப்படுவதைத் தடுக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் இந்த மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் புகார் அளித்தால், அது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னரே ஊதிய பிடித்தம் செய்யப்படும்.
