மழைக்காலத்தில் ஆறுகளில் நிலவும் பேராபத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில், உத்தராகண்ட் காவல்துறை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் பெய்த பலத்த மழையால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் வேளையில், நடுவில் இருக்கும் ஒரு பெரிய பாறையில் மூன்று சிறுவர்கள் நிற்கின்றனர். ஆற்று வெள்ளத்தின் வேகம் அச்சுறுத்தும் வகையில் இருந்தபோதிலும், அதைப் பொருட்படுத்தாமல் அச்சிறுவர்கள் திடீரெனப் பாய்ந்து நீந்தத் தொடங்குகின்றனர். வெள்ளப்பெருக்கின் போது ஆற்று நீரின் வேகம், மறைந்திருக்கும் பாறைகள் மற்றும் திடீர் நீர்மட்ட உயர்வு ஆகியவை நொடிப் பொழுதில் உயிரைப் பறிக்கக்கூடியவை என்பதைச் சுட்டிக்காட்டிய காவல்துறை, இதுபோன்ற ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த விடியோவைப் பார்த்த ஏராளமான பயனர்கள், காவல்துறையின் விழிப்புணர்வு முயற்சியைப் பாராட்டுவதோடு, அச்சிறுவர்களின் பொறுப்பற்ற செயலுக்குக் கடும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பல உயிர்கள் பலியாகும் சம்பவங்கள் தொடர்ந்தபோதிலும், சிலர் எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பது வருத்தமளிப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். மக்கள் அனைவரும் இதுபோன்ற ஆபத்தான இடங்களை விட்டு விலகி பாதுகாப்பாக இருக்குமாறும், யாரேனும் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டால் உடனடியாக 112 என்ற அவசர உதவி எண்ணிற்குத் தகவல் தெரிவிக்குமாறும் உத்தராகண்ட் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
