அதிமுகவிற்குள் உட்கட்சிப் பூசல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதை உணர்த்தும் வகையில் முக்கிய மூத்த தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது, தங்கமணியின் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்த நிலையில், அதற்குப் பதிலாக சில நாட்கள் கழித்து வழங்கப்பட்ட அமைப்புச் செயலாளர் பொறுப்பையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்; இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்தச் சூழலில், தங்கமணியைப் பின்பற்றி மற்றொரு முக்கிய மூத்த தலைவரான எஸ்.பி. வேலுமணியும் இன்று நடைபெறவுள்ள கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைப் புறக்கணிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பது கட்சித் தொண்டர்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
