உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில், கார் மோதிய விபத்தில் பெண்ணொருவருக்குச் சிறு காயம் ஏற்பட்டதற்காக, தொழிலதிபர் ஒருவரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணீஷ் சிங் (36) என்ற அந்த நபர் தனது தொழிற்சாலையிலிருந்து வீடு திரும்பும்போது, சாலையோரம் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த பெண்ணின் மீது எதிர்பாராதவிதமாக அவரது கார் மோதியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், மணீஷ் சிங்கை வழிமறித்துக் கம்பிகளாலும் தடிகளாலும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இந்தக் கும்பல் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் மயங்கி விழுந்த மணீஷ் சிங், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகப் புகாரின் பேரில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்போது 4 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். “எனது கணவரின் கை கால்களைக்கூட உடைத்திருக்கலாம், ஆனால் அவரைக் கொன்றுவிட்டார்களே” என மணீஷ் சிங்கின் மனைவி கதறியது பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது. உயிரிழந்த மணீஷ் சிங்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
