உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு 41 வயதாகியும் தனது குடும்பத்தினர் இதுவரை திருமணம் செய்து வைக்கவில்லை என்றும், தான் ஒருபோதும் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவர் தனது புகாரில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய பெற்றோர் மற்றும் சகோதரர்கள் தன்னுடன் அடிக்கடி சண்டையிடுவதாகவும், தன்னைத் தனியாக வாழ வற்புறுத்துவதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாகத் தனது குடும்பத்தினர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
புகார் அளித்ததுடன் நில்லாமல், தனக்கு ஒரு பொருத்தமான வரனைத் தேடுமாறு தனது குடும்பத்தினருக்கு உத்தரவிடுமாறும் அவர் காவல்துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது குமுறல்களை வீடியோவாகவும் பதிவு செய்து அவர் வெளியிட்டுள்ளார். இந்தப் புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
