“232 பேர் ஓகே.. ஒரு ஆள் மட்டும் மிஸ்ஸிங்!”… சட்டமன்றத்தில் சி.வி. சண்முகம் செய்த அந்த ‘தனி’ காரியம்… பரபரப்பு பின்னணி…!!!

By Muthu Mani on வைகாசி 11, 2026

Spread the love

தமிழகத்தின் 16-வது சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு விழா இன்று தற்காலிக சபாநாயகர் எம்.வி. கருப்பையா முன்னிலையில் நடைபெற்றது. முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 232 எம்.எல்.ஏ-க்கள் முறைப்படி பதவியேற்றுக்கொண்ட நிலையில், அதிமுக-வின் சி.வி. சண்முகம் மட்டும் பொது அவையில் பதவியேற்பதைத் தவிர்த்தார். அவரது பெயர் அழைக்கப்பட்ட போது அவையில் இல்லாத அவர், பின்னர் சபாநாயகரின் அறைக்குத் தனியாகச் சென்று பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அதிமுக-வின் இந்த உள்முரண்பாடு சட்டப்பேரவை வளாகத்திலேயே வெளிப்படையாகத் தெரிந்தது. அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் மற்றொரு குழுவாகவும் தனித்தனியாக அவைக்கு வந்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமியை சட்டமன்றக் குழுத் தலைவராக ஏற்க ஆதரவு தெரிவித்து 17 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே கடிதம் வழங்கியிருப்பது, கட்சியில் நிலவும் பிளவை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

   

தொடர் தோல்விகளால் இபிஎஸ் தலைமை மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியே இந்த மோதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் அதிமுக மீண்டும் உடைய வாய்ப்புள்ளதா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதனைத் தவறான செய்தி என்று சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டு எடப்பாடி பழனிசாமி கடந்து சென்றார். இருப்பினும், சி.வி. சண்முகத்தின் தனிப்பாதை மற்றும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடித விவகாரம் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.