மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக அரசு, திருமணம், விவாகரத்து மற்றும் சொத்துரிமை உள்ளிட்ட குடும்ப விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய ‘பொது சிவில் சட்ட மசோதாவை’ இன்று சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சிறப்புக் குழு தனது இறுதி வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் ‘லிவ்-இன்’ (Live-in) ஜோடிகள் தங்களது வயது மற்றும் அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்து, மாவட்ட பதிவாளரிடம் தங்களது உறவை முறைப்படி பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது. அதேபோல், அவர்கள் பிரிய முடிவு செய்தாலும் அதனை முறைப்படி பதிவு செய்து உறவை ரத்து செய்ய வேண்டும் என்பதும் விதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட வரைவின்படி, கூட்டு வாழ்க்கையில் ஈடுபடும் ஜோடிகள் குறித்த தகவல் அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிவிக்கப்படும் என்பதுடன், உள்ளூர் காவல் நிலையங்களும் தங்கள் பகுதியில் வசிக்கும் ‘லிவ்-இன்’ ஜோடிகளின் விவரங்களை முறையாகப் பராமரிக்கும். ஒருவேளை தங்களது உறவைப் பதிவு செய்யத் தவறினால், அந்த ஜோடிகளுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்படாத கூட்டு வாழ்க்கை உறவுகள் குறித்து அண்டை வீட்டார் அல்லது வீட்டு உரிமையாளர்கள் கூட காவல் துறையில் புகார் அளிக்க இந்த புதிய சட்டத்திருத்தம் அனுமதி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
