தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த 35 வயது பழ வியாபாரி பாஸ்கர், நீண்ட நாட்களாகத் திருமணத்திற்குப் பெண் தேடி வந்த நிலையில், புரோக்கர்கள் மூலம் தஞ்சாவூரைச் சேர்ந்த ஓர் இளம்பெண்ணை அறிமுகம் செய்துள்ளனர். அந்தப் பெண் ஆதரவற்றவர் என்று நம்பிய பாஸ்கர், புரோக்கர்களுக்கு ரூ. 40,000 கமிஷன் வழங்கியதுடன், அப்பெண்ணிற்குப் பட்டுப்புடவை மற்றும் தங்கத் தாலியும் வாங்கித் தந்து கடந்த 20-ஆம் தேதி முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பிறகு இரண்டு நாட்கள் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்திய அந்தப் பெண், மூன்றாம் நாள் பாஸ்கரை மளிகை பொருட்கள் வாங்கக் கடைக்கு அனுப்பிவிட்டுத் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். கடையிலிருந்து வீடு திரும்பிய பாஸ்கர், தனது மனைவி மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டில் சோதனை செய்தபோது, திருமணத்திற்காக வாங்கிய பட்டுப்புடவைகள், நகை மற்றும் ரூ. 10,000 ரொக்கப் பணம் திருடு போயிருந்தது.
மேலும், அந்தப் பெண் தனது அடையாளங்களை மறைக்கச் செல்போனில் இருந்த திருமணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அழித்துவிட்டுத் தப்பியோடியுள்ளார். தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாஸ்கர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திருமணமான இரண்டே நாட்களில் மணப்பெண் வேடமிட்டுத் திருடிச் சென்ற அந்த மர்மப் பெண் மற்றும் புரோக்கர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
