விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே மெக்கானிக் ஷெட்டில் சர்வீஸிற்காக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் லாரி மர்ம நபர்களால் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருப்புக்கோட்டை காந்திநகர் சர்வீஸ் சாலையில் ராமன் என்பவர் லாரி மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 14-ஆம் தேதி கல்லுமடத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் தனது டிப்பர் லாரியை பழுதுபார்ப்பதற்காக இங்கு விட்டுச் சென்றுள்ளார்.
மறுநாள் மாலை லாரிக்குத் தேவையான உதிரிபாகங்களை வாங்கிவிட்டு ராமன் கடைக்குத் திரும்பியபோது, அங்கிருந்த லாரி மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் லாரியை நைசாகத் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையிடம் புகார் அளித்து ஒரு வாரமாகியும் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என ராமன் வேதனை தெரிவித்துள்ளார். லாரி உரிமையாளர் தன்னிடம் வாகனத்தைக் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும், போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
