உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பின்னர் மாப்பிள்ளையான ஹர்ஷ் பாட்டிக்கு போதைப்பொருள் பழக்கம் இருப்பது பெண்ணின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர் அந்தத் திருமணத்தை ரத்து செய்ய முடிவு செய்து, நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தினர்.
திருமணம் நின்ற ஆத்திரத்தில் இருந்த ஹர்ஷ் பாட்டி, கடந்த சனிக்கிழமை இரவு ஒரு பாட்டிலில் அமிலத்துடன் முன்னாள் வருங்கால மனைவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு கதவைத் திறந்த அந்தப் பெண் மீது திடீரென ஆசிட்டை வீசியுள்ளார். இதைக் தடுத்து காப்பாற்ற முயன்ற அந்தப் பெண்ணின் சகோதரி மீதும் அவர் ஆசிட்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றார்.
இரு பெண்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினரும் பொதுமக்களும் சேர்ந்து தப்பியோட முயன்ற ஹர்ஷ் பாட்டியை மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த இரண்டு சகோதரிகளும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
