தமிழக அரசியல் களத்தில் தவெகவைச் சுற்றி உருவாகியுள்ள புதிய நகர்வுகள் பெரும் விவாதங்களைக் கிளப்பியிருக்கின்றன. அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணையத் தயார் எனச் செங்கோட்டையன் பேசிய பேச்சு, தவெக தலைமையின் நேரடி ஆசிர்வாதத்துடனேயே அரங்கேறியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆட்சிக்கு ஆதரவளித்தது நாங்களா அல்லது அதிகாரிகளா என சிபிஎம் மூத்த தலைவர் சண்முகம் கேள்வி எழுப்பியதும், பிரதமர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சை விவகாரத்தில் காங்கிரஸும் தவெகவை உக்கிரமாக விமர்சித்து வருவதும் கூட்டணியில் உள்ள விரிசல்களை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன.
இந்தச் சூழலில், கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிகளுக்குப் பணிந்துபோக தவெக அரசுத் தலைமை தயாராக இல்லை என்பதையும், தங்களுக்கு மாற்று வழிகள் திறந்தே இருக்கின்றன என்பதையும் சூசகமாக உணர்த்தும் உத்தியாகவே, செங்கோட்டையனைத் தவெக தலைமை இப்படிப் பேச அனுமதித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
