கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியான இளையராஜா, கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த மரணம் குறித்து சிறுபாக்கம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது இளையராஜாவின் மனைவி அஸ்வினிதாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால், அவரது தொலைபேசி அழைப்புகள் மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். இதன் மூலம், அஸ்வினிதாவுக்கும் இளையராஜாவின் சித்தி மகனான வெங்கடேசனுக்கும் இடையே இருந்த திருமணத்திற்கு மீறிய உறவே இந்த கொலைக்கு முக்கியக் காரணம் என்பது அம்பலமானது.
சம்பவத்தன்று மது அருந்தும்போது தனது மனைவியுடனான தொடர்பு குறித்து இளையராஜா தட்டிக் கேட்டதால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், இளையராஜாவைத் தாக்கி மயக்கமடையச் செய்துள்ளார். பின்னர் தனது நண்பர் செல்வம் என்பவரின் உதவியுடன், மயங்கிய நிலையில் இருந்த இளையராஜாவை ஒரங்கூர் பகுதிக்குக் கொண்டுவந்து கிணற்றில் வீசிக் கொன்றுள்ளார். மேலும், இது ஒரு விபத்து என்பதைப் போல நம்பவைக்க அவரது இருசக்கர வாகனத்தையும் அங்கேயே நிறுத்தியுள்ளனர். இந்த கொலைத் திட்டம் முழுவதையும் வெங்கடேசன், அஸ்வினிதாவுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவித்ததும் உறுதியானதைத் தொடர்ந்து, வெங்கடேசன், செல்வம் மற்றும் உடந்தையாக இருந்த அஸ்வினிதா ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
