அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவிகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அதிரடியாக விலகி வருகின்றனர். அவ்வாறு விலகும் நிர்வாகிகள், நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் அடுத்தடுத்து இணைந்து வருகின்றனர். அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகள் தவெகவிற்குச் செல்வது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடர் கட்சித் தாவல்களால் ஏற்பட்டுள்ள அரசியல் பின்னடைவைத் தடுத்து, கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதன்படி, வரும் ஜூலை 6-ம் தேதி முதல் மாவட்ட வாரியாக முக்கிய நிர்வாகிகளுடன் அவர் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஜூலை 6-ம் தேதி தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்துகிறார். வரும் ஜூலை 9-ம் தேதி வரை எந்தெந்த மாவட்ட நிர்வாகிகளுடன் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும் என்ற அதிகாரப்பூர்வ பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
