பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணிக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் கட்சியை இரண்டாக உடைத்துள்ளது. இருவரும் நான்தான் தலைவர் எனக் கூறி நிர்வாகிகளை நீக்கியும் நியமிக்கும் வருகிறார்கள். சமீபத்தில் ராமதாசால் கட்சியின் இணை பொது செயலாளராக நியமிக்கப்பட்ட சேலம் எம்எல்ஏ அருளின் பாமக சட்டமன்ற கொரடாவை பறிக்க வேண்டும் என்று சபாநாயகர் இடம் அன்புமணி ஆதரவு மூன்று எம்எல்ஏக்கள் மனு கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ராமதாஸ் அதிரடியாக உத்தரவிட்டார். நேற்று முன்தினம் ராமதாஸ் திண்டிவனத்தில் பாமக செயற்குழுவையும், அன்புமணி பனையூரில் பாமக நிர்வாக குழு கூட்டத்தையும் தனித்தனியாக கூட்டினர்.
இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இப்படி பாமகவின் தலைவர் பதவி தொடர்பாக இருவரும் தற்போது தேர்தல் ஆணையத்தை நாடி இருப்பதால் மாம்பழ சின்னம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அன்புமணியின் தலைவர் பதவி மே மாதத்துடன் நிறைவடைந்து விட்டதாக ராமதாஸ் முறையீடு செய்துள்ளார். அதே சமயம் அன்புமணி தரப்பினர் 2026 ஜூன் மாதம் வரை தலைவர் பதவி உள்ளதாக மல்லுக்கு நிற்கின்றனர். ஒருவேளை இந்த சண்டை மேலும் வலுவடைந்து கட்சி இரண்டாக உடைந்தால் பாமகவின் மாம்பழ சின்னம் முடக்கப்படும் வாய்ப்புள்ளது என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
