ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளிலும் அலுவலகம் வருமாறு வற்புறுத்திய மேலாளருக்கும், அதற்கு மறுப்பு தெரிவித்த ஊழியருக்கும் இடையே ஜூம் (Zoom) அழைப்பின் போது ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்த மோதலின் உச்சகட்டமாக, வேலைக்கு வர மறுத்த ஊழியரை மேலாளர் காவல்துறையை அழைத்து கைது செய்யப்போவதாக மிரட்டியது பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு அஞ்சாத அந்த ஊழியர், “நான் வர முடியாது, நீங்கள் யாரை வேண்டுமானாலும் கூப்பிடுங்கள்” என்று துணிச்சலாகப் பதிலளித்துள்ளார்.
View this post on Instagram
இந்தச் சம்பவத்தின் வீடியோவை மோஹித் பாண்டே என்ற பயனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்வது கடின உழைப்பு அல்ல, அது உங்களை மனநோயாளியாக்கும்” என்ற கருத்துடன் பகிரப்பட்ட இந்த வீடியோ, மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த விவாதத்தைத் தொடர்ந்து, அந்த ஊழியர் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல், கார்ப்பரேட் நிறுவனங்களில் நிலவும் நச்சுத்தன்மை வாய்ந்த (Corporate Toxicity) பணிச்சூழல் குறித்த புதிய விவாதத்தை இணையதளங்களில் கிளப்பியுள்ளது.
நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவை கண்டு கொந்தளித்துள்ளனர். “ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு வராமல் இருப்பது என்ன குற்றமா? இதற்கெல்லாம் எப்படி போலீஸை கூப்பிட முடியும்?” என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இத்தகைய அதிகார வர்க்க மனப்பான்மை கொண்ட மேலாளர்களிடம் பணியாற்றுவதை விட வேலையில்லாமல் இருப்பதே மேல் என்று பல பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தனியார் நிறுவனங்களில் ஊழியர்களின் மனநலம் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலை (Work-Life Balance) எந்த நிலையில் உள்ளது என்பதைப் பிரதிபலிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
