தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், தனது மைத்துனரும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா குறித்து அதிரடியான புகார்களைத் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராகப் பார்க்கப்படும் ஆதவ் அர்ஜுனா, உண்மையில் த.வெ.க.வைச் சிதைக்க தி.மு.க-வால் அனுப்பப்பட்ட ஒரு ‘ஸ்லீப்பர் செல்’ என்று ஜோஸ் சார்லஸ் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். விஜய்யின் அரசியல் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு நலன் விரும்பியாக இந்த எச்சரிக்கையை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதிவில் ஆதவ் அர்ஜுனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ஜோஸ், த.வெ.க-வுடன் எந்தக் கட்சியும் கூட்டணி வைக்க முடியாமல் முட்டுக்கட்டை போடுவதே அவர்தான் என்று கூறியுள்ளார். இதற்குப் பின்னால் ஆதவ் அர்ஜுனாவின் சுயநலமும், அதிகாரப் பசியும் மட்டுமே இருப்பதாகச் சாடியுள்ளார். மேலும், கரூரில் 41 உயிர்கள் பலியான துயரச் சம்பவத்தின் பின்னணியில் ‘சகுனியாக’ இருந்து காய் நகர்த்தியவர் அவர்தான் என்றும், சி.பி.ஐ. விசாரணையில் அவரது உண்மை முகம் வெளிப்படும் என்றும் பகீர் கிளப்பியுள்ளார்.
ஆதவ் அர்ஜுனா தான் செல்லும் இடமெல்லாம் தன்னை ஒரு தலைவனாகக் கட்டமைக்க முயல்வார் என்றும், இதைக் கண்டறிந்ததாலேயே திருமாவளவன் அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து வெளியேற்றினார் என்றும் ஜோஸ் சுட்டிக்காட்டியுள்ளார். “எங்கள் குடும்பத்தைப் பிரிக்க முயன்றது போல, உங்கள் குடும்பத்தையும் அரசியலையும் சிதைக்க அவர் தயங்கமாட்டார்” என்று தனது சொந்த அனுபவத்தின் வாயிலாக விஜய்க்கு உருக்கமான எச்சரிக்கை விடுத்துள்ளார். செந்தில் பாலாஜியை தி.மு.க-விற்கு அழைத்துச் சென்றதிலும் இவருக்குப் பங்கு உண்டு என்பதையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
விஜய்யின் அரசியல் பயணம் தெளிவாக இருந்தாலும், அவர் பயணிக்க வேண்டிய தடம் மிகவும் வழுக்கலாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஜோஸ், கூடவே இருந்து குழிபறிக்கும் துரோக சக்திகளை அடையாளம் காணத் தவறினால் வெற்றி பாதியிலேயே முடங்கிவிடும் என்று எச்சரித்துள்ளார். த.வெ.க-வின் எதிர்காலத்தைக் காக்க இப்போதே துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நெருங்கிய உறவினரே ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ள இந்த விவகாரம், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
