தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறது. மறுபக்கம் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ள நிலையில் மேலும் சில கட்சிகளை கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் ஈபிஎஸ் ஈடுபட்டு வருகிறார். இவர்களுக்கு நடுவே தமிழக வெற்றி கழகம் கட்சி மூலமாக அரசியலில் நுழைந்துள்ள விஜய் மக்களுக்கு புதிய ஆட்சியை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வர விஜய்யை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆனால் இதுவரை கூட்டணி குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடாமல் உள்ளார். இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே மறுபுறம் விஜய்க்கு ஆதரவாக புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் பேச தொடங்கியுள்ளார். 2026 தேர்தலில் களமிறங்கும் விஜய்க்கு வாக்கு வங்கி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் வாக்குகள் வரை விஜய் பெறுவார். தமிழக வெற்றி கழகம் கட்சியிலிருந்து வலுவான வேட்பாளர்கள் போட்டியிட்டால் எளிதாக வெற்றி பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். திடீரென இவர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது இபிஎஸ்-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
