கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவரும் ரக்ஷிதா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ரக்ஷிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ரக்ஷிதா கார்த்திக்கிடம் வற்புறுத்தியுள்ளார். ஆனால் கார்த்திக் காலம் தாழ்த்தியதால் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரக்ஷிதா பெற்றோர் கூறியபடி கார்த்திக்குடன் பேசுவதை நிறுத்திவிட்டு அவரது செல்போன் நம்பரையும் பிளாக் செய்தார்.
இதனால் கோபமடைந்த கார்த்திக் ரக்ஷிதா வேலைக்கு செல்லும் போது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று தகராறு செய்துள்ளார். பின்னர் கத்தியால் ரக்ஷிதாவை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுதாயமடைந்த ரக்ஷிதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரக்ஷிதா உயிரிழந்தார்.
இதற்கிடையே போலீசுக்கு பயந்து கார்த்திக்கும் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திக்கின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
