விழுப்புரம் அருகே காதலி குறித்துத் தவறாகப் பேசிய நண்பரை, இரண்டு பேர் சேர்ந்து தலையில் கல்லைப் போட்டுத் தாகூராகக் கொலை செய்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வடசிறுவளூரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் கடந்த 30-ம் தேதி தனது நண்பர்களான ஜெகதீசன் மற்றும் ஜெகனுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது ஜெகதீசன் காதலிக்கும் பெண்ணைப் பற்றி சசிகுமார் அவதூறாகப் பேசியதால் ஆத்திரமடைந்த இருவரும், சசிகுமாரைத் தணியல் கிராமத்திற்கு அழைத்துச் சென்று தலையில் கல்லைப் போட்டுத் தாக்கி கொலை செய்துள்ளனர்.
பின்னர் கொலையை மறைக்கச் சசிகுமாரின் உடலைப் பைக்கில் எடுத்துச் சென்று பந்தக்கல்லு பகுதியில் உள்ள பாறைகளுக்கு இடையே வீசிச் சென்றுள்ளனர். போலீசாரின் விசாரணையில் சிக்கிய ஜெகதீசன் அளித்த தகவலின் பேரில், அழுகிய நிலையில் இருந்த சசிகுமாரின் உடல் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெகதீசனைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மற்றொரு நண்பர் ஜெகனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
