“என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத் தொடவே கூடாது..” – இது கான்பூரைச் சேர்ந்த 24 வயது இளைஞர் பிரியான்ஷு ஸ்ரீவஸ்தவாவின் கடைசி ஆசையாகும். கடந்த 2025-ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்த பிரியான்ஷு, கான்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். கடந்த வியாழக்கிழமை, சுட்டெரிக்கும் வெயில் காரணமாக நீதிமன்றத்தில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்த நிலையில், மாலை 3:30 மணியளவில் நீதிமன்றக் கட்டிடத்தின் ஐந்தாவது மாடியிலிருந்து பிரியான்ஷு குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தத் துயரமான முடிவை எடுப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே, பிரியான்ஷு தனது வாட்ஸ்அப் (WhatsApp) ஸ்டேட்டஸில் இரண்டு பக்க தற்கொலை குறிப்பை பதிவிட்டிருந்தார். தனது தந்தையின் தினசரி ஏளனப் பேச்சுகள், வசவுகள் மற்றும் மிரட்டல்களால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். “இப்படி ஒரு தந்தை யாருக்கும் கிடைக்கக்கூடாது” என்று பதிவிட்டுள்ள அவர், தான் 6 வயதாக இருந்தபோது பிரிட்ஜில் இருந்த மாம்பழ ஜூஸைக் குடித்ததற்காக, தனது தந்தை தன்னை நிர்வாணமாக வீட்டை விட்டு வெளியே துரத்திய பழைய வடுக்களையும் பகிர்ந்துள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட அந்த ஆழ்ந்த மனக்காயங்கள் ஆறாமல், காலப்போக்கில் பெருகிக்கொண்டே சென்றதால், தனது 24-வது வயதில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
