திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள ஆவூர் கிராமத்தில் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவரின் வெறிச்செயலால் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த பரதன் என்பவர் மீன் வெட்டும் தொழில் செய்து வருகிறார்.
இவர் நாள்தோறும் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவி சுந்தரியுடன் தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று மீண்டும் மது குடிக்கத் தனது மனைவியிடம் பரதன் பணம் கேட்டுள்ளார்.
சுந்தரி பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த பரதன், சமையலறையில் இருந்த தோசைக்கரண்டியால் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், சூடான கரண்டியால் சுந்தரிக்குச் சூடு வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த சுந்தரியைக் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வலங்கைமான் போலீஸார், தலைமறைவாக இருந்த பரதனைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
