தெலுங்கானா மாநிலம் விகாராபாத் அருகே வரதட்சணை கொடுமையால் 20 வயது இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் காதல் திருமணம் செய்து கொண்ட அனுஷா என்ற பெண்ணை, அவரது கணவர் பரமேஷ் கூடுதல் நகை மற்றும் பணம் கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று வீட்டின் முன் அமர்ந்திருந்த மனைவியை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் இழுத்துச் சென்ற பரமேஷ், மரக்கட்டையால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இந்த கோரமான தாக்குதலில் பலத்த காயமடைந்த அனுஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவன் பரமேஷ் தனது மனைவியைக் கொடூரமாகத் தாக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. மகளைப் பார்க்க வந்த தாயின் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இளம்பெண்ணின் மரணத்திற்குப் பிறகு பரமேஷ் மற்றும் அவரது பெற்றோர் தலைமறைவாகியுள்ள நிலையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
