கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் முடலகி தாலுகாவில் உள்ள இரும்புத் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நண்பர்களான சீதாராம் மற்றும் அருண்குமார். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று இருவரும் தங்கள் அறையில் மது அருந்தியவாறு கோழி இறைச்சி சாப்பிட்டுள்ளனர். அப்போது, சீதாராம் அதிகமாக இறைச்சித் துண்டுகளை சாப்பிட்டதாகக் கூறி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் முற்றிய இந்த வாக்குவாதத்தின் முடிவில், ஆத்திரமடைந்த அருண்குமார் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து சீதாராமின் நெஞ்சில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நண்பரைக் கொன்ற குற்றத்தை மறைக்க எண்ணிய அருண்குமார், உடனடியாக உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று வெல்டிங் செய்யும் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்துவிட்டதாகப் பொய் கூறியுள்ளார். எனினும், நெஞ்சில் இருந்த ஆழமான கத்திக்குத்து காயத்தைக் கண்டு சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த கடாபிரபா போலீசார் அருண்குமாரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் குற்றத்தை முழுமையாக ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
