இந்தியக் குடும்பங்களில் இன்றும் தொடரும் பழமைவாதத் திருமணச் சிந்தனைகளை ரஷ்மி ராஜ் என்ற இளம் பெண் சமூக வலைதளத்தில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். 25 வயதே ஆன ரஷ்மி, தனது வாழ்க்கையிலும் கரியரிலும் கவனம் செலுத்த விரும்புகிறார். ஆனால், அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் அவருக்குத் திருமணம் செய்து வைக்கத் தீவிர அழுத்தம் கொடுப்பதை அந்த வீடியோவில் காட்டியுள்ளார்.
அந்த வீடியோவில், உறவினர்கள் ரஷ்மியிடம் வினோதமான காரணங்களைக் கூறித் திருமணத்திற்கு வற்புறுத்துகின்றனர். “வயதாகிவிட்டால் முகத்தில் மணப்பெண்ணுக்கான பொலிவு (Bride Glow) இருக்காது” என்றும், “உடல் தோற்றம் மாறிவிடும்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேலும், தாமதமாகத் திருமணம் செய்தால் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்றும், தகுதியான கணவன் கிடைக்கமாட்டான் என்றும் கூறி அவரை அச்சுறுத்தும் வகையில் பேசுவது பதிவாகியுள்ளது.
https://www.instagram.com/reel/DXwrFpMS32_/?utm_source=ig_web_copy_link
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் ரஷ்மிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். பெண் என்பவள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் திருமணம் செய்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், இதுபோன்ற குடும்ப அழுத்தம் ஒரு வகை மன ரீதியான வன்முறை என்றும் நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஒருவரின் திருமண வயதைத் தீர்மானிக்கும் உரிமை அவருக்கே இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
