சீனாவில் ஒரு தந்தை தனது மகனுடன் நேரத்தைச் செலவிட்டு, அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பை வலுப்படுத்துவதற்காக தனது 12 வயது மகனை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தந்தை தனது வேலையாக வெளியே சென்றிருந்த நேரத்தில், சிறுவன் அலுவலக அறையில் தனியாக இருந்துள்ளான்.
அந்த நேரத்தில், கையில் கிடைத்த ஒரு லைட்டரை வைத்து சிறுவன் விளையாடத் தொடங்கியுள்ளான். சலிப்படைந்த அவன், அருகில் இருந்த டிஷ்யூ பேப்பர்களை லைட்டரால் பற்றவைக்க, அந்தத் தீ அருகில் இருந்த குப்பைத் தொட்டிக்கு பரவியது. கண் இமைக்கும் நேரத்தில் தீ அலுவலகம் முழுவதும் பரவி பெரும் விபத்தாக மாறியது.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், அலுவலகம் தீக்கிரையானது. சிறுவர்கள் விளைவுகளை அறியாமல் செய்யும் இத்தகைய செயல்கள் ஆபத்தானவை என்றும், பெற்றோர்கள் குழந்தைகளைக் கண்காணிப்பதில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தீயணைப்புத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
