FLASH: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 3 வயது சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது…!!

By Swetha on ஆனி 15, 2026

Spread the love

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர் தம்பதியின் 3 வயது பெண் குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது வாலிபர் ஒருவர் சாக்லேட் வாங்கித் தருவதாகக் கூறி ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு அழைத்துச் சென்று இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த குழந்தை உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை அந்தப் பிஞ்சு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத் தொடர்ந்து, உடற்கூறாய்வு பணிகள் முடிவடைந்த பின்னர், குழந்தையின் உடல் அவர்தம் பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.