அதிமுகவின் திருச்செங்கோடு முன்னாள் ஒன்றிய செயலாளரும், திருச்செங்கோடு ஒன்றியக் குழு முன்னாள் தலைவருமான பாலசுப்ரமணியம், அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட இவர் தவெகவில் இணைந்திருப்பது, கொங்கு மண்டலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியப் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், திருச்செங்கோட்டில் செல்வாக்கு மிக்க பாலசுப்ரமணியத்தை இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்ததாகவும், அவரது வருகை கொங்கு மண்டலத்தில் தவெகவின் கரங்களை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
