அமெரிக்காவின் கடும் கடல்வழிப் போக்குவரத்துத் தடையால் நிலைகுலைந்துள்ள ஈரான், தனது வர்த்தகத்தைக் காப்பாற்றிக் கொள்ள புதிய நிலவழி உத்திகளை வகுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானியத் துறைமுகங்களை அமெரிக்கப் போர்க்கப்பல்கள் முற்றுகையிட்டுள்ளதால், ஒரு கப்பல் கூட வெளியேற முடியாத சூழல் நிலவுகிறது. ஈரானின் 90 சதவீத வர்த்தகம் கடல் வழியாகவே நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த முடக்கத்தைத் தகர்க்க ரஷ்யா, சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் நிலவழி வர்த்தகப் பாதைகளை வலுப்படுத்த ஈரான் மாகாண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் நெருக்கடியைக் குறைக்கப் பல அமைச்சகங்களை ஒருங்கிணைத்து, நில மற்றும் கடல் எல்லைகளில் புதிய போக்குவரத்து அமைப்புகளை உருவாக்க ஈரான் திட்டமிட்டுள்ளது. கடல்வழித் தடையால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளை ஈடுகட்ட, அண்டை நாடுகளுடனான சாலை மற்றும் ரயில் போக்குவரத்து வர்த்தகத்தை ஈரான் நம்பியுள்ளது. பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈரானின் ஆதிக்கம் குறைந்திருக்கும் வேளையில், இந்த நிலவழி வர்த்தகத் திட்டம் அந்நாட்டின் பொருளாதாரச் சந்தையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது.
மற்றொரு அதிரடி நடவடிக்கையாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு 270 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிடம் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. இத்தாக்குதல்களுக்குத் தங்களது வான்வழிப் பாதையையும், தளங்களையும் பயன்படுத்த அனுமதித்ததாகக் கூறி சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய அண்டை அரபு நாடுகள் மீது ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதன் மூலம் மற்ற அரபு நாடுகளையும் போர் குற்றவாளிகளாக ஈரான் பிரகடனப்படுத்தியுள்ளது.
ஈரான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா மொஹாஜெரானி உறுதிப்படுத்தியுள்ள இந்த இழப்பீட்டுக் கோரிக்கை, சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்த சில நாடுகள் நேரடியாக உதவியதாகவும் ஈரான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. வர்த்தகத்தைப் பாதுகாக்க நிலவழிப் பாதைகளைத் தேடுவது மற்றும் பெரும் தொகையை இழப்பீடாகக் கோருவது ஆகிய ஈரானின் இந்த இரு முக்கிய நகர்வுகளும், அமெரிக்காவுடனான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில் முக்கிய விவாதப் பொருளாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
