ஆந்திர மாநிலம் காக்கிநாடா – சமல்கோட்டா சாலையில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கித் தவித்தன. அப்போது அந்த வழியாக வந்த ரங்கம்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், தான் பணியில் இல்லாத நிலையிலும் மனிதாபிமானத்துடன் செயல்பட்டார். அவர் தனது கைக்குழந்தையைச் சுமந்தபடியே களத்தில் இறங்கி, துரிதமாகச் செயல்பட்டு போக்குவரத்தைச் சீர் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தன்னலம் கருதாமல் கடமையாற்றிய அந்தப் பெண் காவலரின் அர்ப்பணிப்பு உணர்வை பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். நெருக்கடியான சூழலில் ஒரு தாயாகவும், ஒரு காவலராகவும் அவர் காட்டிய துணிச்சல் பலருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
