மெக்சிகோ நாட்டின் ஜாலிஸ்கோ மாகாணத்தில் உள்ள லாகோஸ் டி மொரேனோ நகராட்சி உட்பட பல பகுதிகளில், மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் மின்சாரக் கம்பங்களில் டேப் மூலம் பிணைக்கப்பட்டு மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில், சில சமயங்களில் அவர்கள் திருடியதாகக் கூறப்படும் வாகனங்களுக்கு அருகிலேயே, உடல் முழுவதும் டேப்பால் சுற்றப்பட்டு அவர்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவின. இந்த விசித்திரமான மற்றும் அதிரடியான செயலைச் செய்தது யார் என்று தெரியாத நிலையில், சமூக ஊடகவாசிகள் அந்த மர்ம நபருக்கு உடனடியாக ‘லாகோஸ் டி மொரேனோவின் பேட்மேன் (வவ்வால் மனிதன்)’ என்று புனைப்பெயர் சூட்டி, இணையத்தில் அவரை வைரலாக்கிப் பாராட்டி வருகின்றனர்
இந்த விவகாரம் தொடர்பாக ஜாலிஸ்கோ மாகாண அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட தகவல்படி, இதுபோன்ற முதல் சம்பவம் கடந்த ஜூன் 13-ம் தேதி நடந்துள்ளது, அதனைத் தொடர்ந்து ஜூன் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளிலும் அடுத்தடுத்து இதேபோன்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாறு டேப்பால் கட்டி வைக்கப்பட்ட நபர்கள் உண்மையிலேயே குற்றவாளிகள்தானா அல்லது தனிப்பட்ட பகை காரணமாகத் தவறாகக் குற்றம்சாட்டப்பட்டுப் பழிவாங்கப்பட்டார்களா என்ற கோணத்திலும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர் யார் என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
