ஹரியானா மாநிலம் குருகிராமில் தனது மகனின் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, காதலியுடன் ஹோட்டலில் தங்கியிருந்த 56 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சோஹ்னா பகுதியைச் சேர்ந்த அந்த நபர், குருகிராம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் தனது பெண் தோழியுடன் தங்கியிருந்தபோது, திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
மேலும் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஹோட்டல் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் பாலுணர்வைத் தூண்டும் வீரியமிக்க மருந்து அட்டைகள் கண்டெடுக்கப்பட்டதால், மருத்துவ ஆலோசனையின்றி அத்தகைய மருந்துகளை அதிகளவில் உட்கொண்டதே மாரடைப்புக்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
இந்தத் துயரச் சம்பவம் அந்த நபரின் குடும்பத்தினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த நபரின் மகனுக்கு வரும் மார்ச் 12-ம் தேதி திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மற்றும் உறவினர்களின் வருகையென வீடு களைகட்டியிருந்தது.
இந்நிலையில் மகனின் திருமணக் கனவுகள் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சியான சூழலுக்கு மத்தியில், குடும்பத் தலைவர் இத்தகைய சர்ச்சைக்குரிய சூழலில் உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் உடற்கூறாய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் அதே வேளையில், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
