விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், தவெக ஆட்சி அமைப்பதைத் தடுக்க திமுக – அதிமுக கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும், தன்னை பொது முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதாகவும் கூறியிருந்தார். இந்த கருத்து தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையையும் திமுகவினரின் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்திய நிலையில், அது குறித்து திருமாவளவன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தன்னுடைய பேட்டி தொடர்பாக விளக்கமளித்த திருமாவளவன், திமுக – அதிமுக கூட்டணி குறித்தோ அல்லது தன்னை முதலமைச்சர் ஆக்குவது குறித்தோ எந்தவொரு தலைவரும் தன்னிடம் அதிகாரப்பூர்வமாகப் பேசவில்லை என்று கூறியுள்ளார். இவை அனைத்தும் வெறும் கிசுகிசுப்புகள் மற்றும் முணுமுணுப்புகளின் அடிப்படையிலானவை என்றும், இடைத்தரகர்கள் அல்லது தனது நலம் விரும்பிகள் சிலர் பேசிய விஷயங்களை வைத்தே தான் அவ்வாறு குறிப்பிட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், தவெக அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காக விசிக பேரம் பேசுவதாகக் கூறப்படும் அவதூறுகளை மறுத்த அவர், தாங்கள் தற்போதும் திமுக கூட்டணியிலேயே நீடிப்பதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவே தவெகவிற்கு ஆதரவு அளித்ததாகவும், தவெக ஆட்சியில் தாங்கள் அங்கம் வகிக்கப் போவதில்லை என்றும் கூறிய திருமாவளவன், தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராவது எளிதான காரியம் அல்ல என்றும் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
