தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகவின் கதை முடிந்துவிட்டது என்று நம்முடைய இன எதிரிகள் சூழ்ச்சி செய்து கவிதை பாடி வருவதாகக் குறிப்பிட்டார். 1949-ல் தொடங்கப்பட்ட திமுக, எத்தனையோ தேர்தல்களில் பல வெற்றிகளையும் தோல்விகளையும் சந்தித்துள்ளது என்றும், தோல்வி அடையும் நேரத்தில்தான் திமுக எப்போதும் ஒரு ‘பீனிக்ஸ் பறவை’ போல மீண்டும் கிளம்பி எழும் என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்கள் மத்தியில் எந்தப் பணியும் செய்யாமல், பூத் ஏஜென்ட்களைக் கூட நியமிக்காமல் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) சமூக ஊடகங்கள் மூலம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ளதாக விமர்சித்தார். குறிப்பாக, இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்தி சிறு பிள்ளைகள் மற்றும் குழந்தைகளை வைத்து தவெக திட்டமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளதாகவும், அக்குழந்தைகள் மூலம் அவர்களின் பெற்றோர் மற்றும் பெரியவர்களின் வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சமூக ஊடக உத்தி தங்களின் கணக்குக்குத் தெரியாமல் போய்விட்டதாக ஒப்பக்கொண்ட ஸ்டாலின், இனிமேல் திமுகவினர் உஷாராக இருந்து அதனை முறியடிக்கத் திட்டமிட்டு வருவதாகக் கூறினார். மேலும், தொண்டர்கள் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஐந்து ஆண்டு கால திட்டப் பணிகள் தடைபட்டிருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்து மக்களுக்காகத் தொடர்ந்து போராடி மீண்டும் திமுகவே ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையோடு பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
