சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவரை ஏமாற்றி அழைத்துச் சென்று, மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்த பிசியோதெரபி மருத்துவர் கார்த்திகேயன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெரம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த அந்த மாணவியை, நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கூறி கார்த்திகேயன் காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது அவர் வழங்கிய குளிர்பானத்தில் முன்கூட்டியே மயக்க மருந்து கலந்திருந்ததால், அதனைப் பருகிய மாணவி சுயநினைவை இழந்தார். பின்னர் கொளத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு தூக்கி சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
தன்னிலை உணர்ந்து கண்விழித்த மாணவி, அங்கிருந்து தப்பித்து வந்து தனது குடும்பத்தினரிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். ஆரம்பத்தில் குற்றத்தை மறுத்த மருத்துவர் மீது, கொளத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திப் புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்தனர்.
திட்டமிட்டே இந்த அநாகரிகச் செயலில் ஈடுபட்ட மருத்துவர் மீது பி.என்.எஸ் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிகிச்சை அளிக்க வந்த இடத்தில் மாணவிக்கு நேர்ந்த இந்தக் கொடுமை மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
