தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மார்ச் 28-ஆம் தேதி பெரம்பூர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டிருந்தார். இதற்காக முன்கூட்டியே அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. 300 பேர் கூட வேண்டிய இடத்தில் 3000 பேர் கூடிவிட்டால் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது கடினம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் கூறி பெரம்பூர் பகுதியில் பிரச்சாரம் செய்ய அனுமதி நிராகரிக்கப்பட்டது.
இந்தத் தடையைத் தொடர்ந்து, பிரச்சாரம் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த சாலையில் திடீரென பள்ளம் தோண்டப்பட்டு, இரும்புக் கம்பிகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தவெக-வின் எழுச்சியைக் கண்டு பயந்துபோன திமுக அரசு, அதிகாரிகளைப் பயன்படுத்தி ஜனநாயக விரோத முறையில் முட்டுக்கட்டை போடுவதாகச் சாடியுள்ளார். நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே அனுமதி கோரிய நிலையில், திட்டமிட்டே அந்தப் பகுதியில் பள்ளங்களைத் தோண்டிப் பிரச்சாரத்தைத் தடுப்பது ஒரு ‘பாசிசத் தாக்குதல்’ என்றும் அவர் தனது அறிக்கையில் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மக்களின் பேராதரவைப் பெற்ற ஒரு புதிய அரசியல் கட்சியின் உரிமைகளை நசுக்குவதன் மூலம், திமுக தனது அதிகார பலத்தைக் காட்டுவதாகவும், இது அந்த அரசின் பயத்தையே காட்டுவதாகவும் விஜய் விமர்சித்துள்ளார். வரும் தேர்தலில் மக்கள் இத்தகைய அடக்குமுறைக்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நாளை (மார்ச் 28) அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், வருகிற மார்ச் 30-ஆம் தேதி மீண்டும் பெரம்பூரில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி தவெக சார்பில் புதிய விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
