“188 டூ 160″… திமுக கோட்டையில் ஆட்டம் காணும் சீட் கணக்கு…. ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடி…. அதிரும் தமிழக அரசியல்….!

By Nanthini on தை 28, 2026

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வரும் பிப்ரவரி 3-ஆம் தேதிக்குப் பிறகு தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. கடந்த 2021 தேர்தலைப் போலவே தற்போதைய கூட்டணியை சிதறாமல் கொண்டு செல்ல முதல்வர் மு.க.ஸ்டாலின் விரும்பினாலும், கூட்டணிக் கட்சிகளின் அதீத எதிர்பார்ப்பு திமுகவுக்குச் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட 25 இடங்களை விட கூடுதலாக 40 இடங்கள் வரை கோருவதாகவும், விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் தலா 6 இடங்களுக்கு மேல் இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளைக் கேட்கத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சூழலில், புதிதாகக் கூட்டணியில் இணைந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் ‘கௌரவமான’ எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. மநீம தரப்பில் சுமார் 12 தொகுதிகள் வரை எதிர்பார்க்கப்படுவதால், கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்த திமுக தான் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைக்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடந்த முறை 188 இடங்களில் (உதயசூரியன் சின்னத்தில்) போட்டியிட்ட திமுக, இந்த முறை கூட்டணி கட்சிகளின் பிடிவாதத்தால் 160 முதல் 170 இடங்களுக்குள் மட்டுமே போட்டியிடும் சூழல் உருவாகலாம் என்று அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.