மகாராஷ்டிர மாநிலம் சந்திரப்பூரில், தந்தை ஒருவரைக் கொலை செய்துவிட்டு, கருணை அடிப்படையில் அவரது காவல்துறை வேலையைப் பெற்ற மகளின் பயங்கரச் செயல் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அம்பலமாகியுள்ளது. ஜெயந்த் பால்லாவார் என்ற தலைமை காவலர், கடந்த 2023-ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். அப்போது அது இயற்கை மரணம் என்று பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது.
ஜெயந்தின் மகளான ஆர்யா பால்லாவார், ஆஷிஷ் என்ற காவலருடன் காதலில் இருந்துள்ளார். இவர்களது காதலுக்குத் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரைக் கொலை செய்ய ஆர்யா திட்டமிட்டுள்ளார். அதன்படி, தந்தைக்குக் கொடுத்த மில்க் ஷேக்கில் விஷம் கலந்து கொடுத்து அவரைக் கொன்றுள்ளார். தந்தை இறந்த பிறகு, வாரிசு அடிப்படையில் அதே காவல்துறை வேலையை ஆர்யா பெற்று, கடந்த சில காலமாகக் காவலராகப் பணியாற்றியும் வந்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலுக்கு உதவிய காதலன் ஆஷிஷ் மற்றும் ஆர்யாவுக்கு இடையே சமீபத்தில் ஏற்பட்ட மோதலே இந்த உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இவர்களது ரகசியத்தை அறிந்த ஒருவர் மூலம் போலீசாருக்குத் தகவல் கிடைக்க, விசாரணையில் ஆர்யா தனது தந்தையை விஷம் வைத்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார். தற்போது ஆர்யா, அவரது காதலன் ஆஷிஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு காவல்துறை வேலையை அடையவும், காதலுக்குத் தடையாக இருந்தாரே என்பதற்காகவும் பெற்ற தந்தையையே மகள் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
