ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அய்யவாரிப்பள்ளி கிராமத்தில், 24 வயது இளம்பெண் மாதவி என்பவர் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டப்படிப்பை முடித்துவிட்டு தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்த மாதவிக்கு, நாகூர் பாஷா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பழகி வந்த நிலையில், நாகூர் பாஷா ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவருக்குக் குழந்தைகள் இருப்பதும் மாதவிக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மாதவி, அவருடனான உறவைத் துண்டித்து விலகிச் செல்ல முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நாகூர் பாஷா, மாதவியைப் பின்தொடர்ந்து மிரட்டத் தொடங்கியுள்ளார். தாங்கள் நெருக்கமாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி அவர் மாதவிக்குக் கடுமையான மன உளைச்சலைத் தந்துள்ளார். இதனால் தனது குடும்பத்தின் மானம் போய்விடுமோ என்ற அச்சத்திலும், தந்தையின் கௌரவத்திற்குப் பங்கம் வந்துவிடுமோ என்ற வேதனையிலும் இருந்த மாதவி, யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார். இறுதியில் இந்தத் தொல்லைகளைத் தாங்க முடியாமல், தனது வீட்டிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
உயிரை மாய்ப்பதற்கு முன்னதாக மாதவி தனது உள்ளங்கையில், “Take Care Papa” (அப்பாவை கவனித்துக் கொள்ளுங்கள்) என்று எழுதி வைத்துவிட்டுச் சென்ற உருக்கமான செய்தி பார்ப்போரை நிலைகுலையச் செய்துள்ளது. தனது மரணத்திற்குப் பின் தந்தை தனிமையாகி விடுவாரே என்ற கவலையிலேயே அவர் அந்தச் செய்தியை எழுதியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்துப் புகார் அளித்துள்ள மாதவியின் குடும்பத்தினர், நாகூர் பாஷாவே தற்கொலைக்குக் காரணம் எனத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
