தாலியைக் கழற்றச் சொல்லி இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்…!

By SATHISH R on ஆடி 4, 2026

Spread the love

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியைச் சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து, தனது இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இவர் பழவந்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் கண்ணாடியகத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அந்த கடைக்கு வந்து சென்ற நங்கநல்லூர் நேரு காலனியைச் சேர்ந்த வினோத்குமார் (35) என்பவருடன் அந்தப் பெண்ணுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

   

இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட வினோத்குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண்ணை ஏமாற்றித் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணை அவர் வலுக்கட்டாயமாகப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அடுத்த நாளும் அந்தப் பெண்ணின் குழந்தைகளைக் கொன்றுவிடுவதாகக் கொடூரமாக மிரட்டி, மீண்டும் அவரைத் தனது வீட்டுக்கு வரவழைத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், கணவர் கட்டிய தாலியைக் கழற்றி எறிந்துவிட்டு, தன்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அந்தப் பெண்ணை வினோத்குமார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

   

இந்தக் கொடுமை குறித்துப் பாதிக்கப்பட்ட இளம்பெண், பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், வினோத்குமாரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் இளம்பெண்ணை மிரட்டிப் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதையடுத்து, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வினோத்குமாரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.