கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள தையில் பகுதியை சேர்ந்த சரண்யா என்ற பெண், தனது கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த ஒன்றரை வயது குழந்தையை ஈவுஇரக்கமின்றி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு, தனது காதலன் நிதின் என்பவருடன் இணைந்து கடற்கரைக்குக் குழந்தையை அழைத்துச் சென்ற சரண்யா, அங்கிருந்த பாறையில் குழந்தையின் தலையை மோதச் செய்தும், தூக்கி எறிந்தும் கொடூரமாகக் கொன்றுள்ளார்.
ஆரம்பத்தில் குழந்தை காணவில்லை என்றும், தன் கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் நாடகமாடி போலீஸாரை திசைதிருப்ப முயன்றார். ஆனால், காவல்துறையின் தீவிர விசாரணையில் அவரது கள்ளக்காதல் விவகாரமும், குழந்தையைத் திட்டமிட்டுத் தீர்த்துக் கட்டிய உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தன.
இந்தக் கொடூரக் கொலை தொடர்பான வழக்கு தளிப்பரம்பு கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வந்தது. இறுதி விசாரணையில், பெற்ற குழந்தையைத் துடிக்கத் துடிக்கக் கொன்ற சரண்யாவைக் குற்றவாளி என உறுதி செய்த நீதிபதி, அவருக்கான தண்டனை விவரங்களை அறிவிக்க உத்தரவிட்டார்.
அதே சமயம், இந்தக் கொலையில் தொடர்புடையதாக கருதப்பட்ட கள்ளக்காதலன் நிதின் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லாததால், அவரை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கள்ளக்காதல் மோகத்தால் பெற்ற பிள்ளையையே தாயே கொன்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பலத்த கண்டனங்களை பெற்று வருகிறது.
