நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனது சொந்த மாவட்டமான சிவகங்கையில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2016-ல் கடலூர் தொகுதியிலும், 2021-ல் சென்னை திருவொற்றியூர் தொகுதியிலும் களம் கண்ட அவர், இந்த முறை தென் தமிழகத்தில் தனது செல்வாக்கை நிரூபிக்க காரைக்குடி தொகுதியைத் தேர்வு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக நாம் தமிழர் கட்சியினர் காரைக்குடியில் இப்போதே களப்பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த முக்கிய அறிவிப்பு வரும் 21-ம் தேதி திருச்சியில் நடைபெறவுள்ள கட்சியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரைக்குடி தொகுதியானது தற்போது காங்கிரஸ் கட்சியின் வசம் உள்ளது. நீண்டகாலமாகப் பாரம்பரியக் கட்சிகளின் கோட்டையாக விளங்கும் இந்தத் தொகுதியில் சீமான் போட்டியிடுவது, அந்தப் பிராந்தியத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். சொந்த மண் என்பதால் மக்களிடையே இருக்கும் நெருக்கமும், இளைஞர்களின் ஆதரவும் தமக்குச் சாதகமாக அமையும் என அவர் நம்புகிறார். காங்கிரஸின் பலமான கோட்டையைக் குறிவைப்பதன் மூலம், ஆளுங்கூட்டணிக்கு நேரடி சவால் விடுக்க சீமான் தயாராகி வருகிறார்.
