திருச்சியில் இன்று மதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘சமத்துவ நடைபயணம்’ தொடக்க விழாவில், கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் பங்கேற்காதது திமுக கூட்டணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவிற்காக திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் மதிமுக நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தனர்.
இருப்பினும், நடைபயண அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதற்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் அதிருப்தி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சியினர் இந்த விழாவைப் புறக்கணித்ததாகத் தெரிகிறது. இந்த விவகாரம் திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
