திருச்சியில் நடைபெற்ற பிரம்மாண்ட திமுக மாநில மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதிய ஜனதா கட்சியையும் அதிமுகவையும் கடுமையாகச் சாடினார். “திமுகவும், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் இருக்கும் வரை தமிழ்நாட்டை பாஜகவால் ஒருபோதும் ஆள முடியாது” என்று சவால் விடுத்த அவர், மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்தைப் புறக்கணிப்பதாகக் குற்றம் சாட்டினார்.
இதனால் தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை வழங்க மனமில்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு, வரும் தேர்தலில் தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும், எத்தனை ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டினாலும் தமிழ்நாடு எப்போதும் பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் வராது என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
மேலும், அதிமுகவை பாஜக கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கி வருவதாகக் குறிப்பிட்ட முதல்வர், எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்திற்காகக் கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு அடிமையாகக் கிடக்கிறார் என்று விமர்சித்தார். பீகாரில் நிதிஷ் குமாரை முன்னிறுத்திவிட்டு தற்போது அங்கு பாஜக ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிப்பது போல, தமிழகத்திலும் காலூன்றப் பார்ப்பதாகச் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை போன்ற திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தமக்கு அரணாக இருப்பதாகவும், என்ன முகமூடி அணிந்து வந்தாலும் தமிழக மண்ணில் கருப்பு சிவப்பு படை இருக்கும் வரை காவிக்கூட்டத்தின் எண்ணம் ஈடேறாது என்றும் அவர் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
