சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் (CBFC) பல்வேறு நிபந்தனைகளுடன் இன்று U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள பல அரசியல் வசனங்கள் மற்றும் காட்சிகளுக்குத் தணிக்கை வாரியம் கடும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், படக்குழுவினர் சில மாற்றங்களைச் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். குறிப்பாக, அரசியல் ரீதியாகப் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் படத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. மேலும், திராவிட அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ‘தீ பரவட்டும்’ என்ற வாசகத்திற்குப் பதிலாக, ‘நீதி பரவட்டும்’ என்று மாற்ற தணிக்கைக் குழு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாற்றங்களைத் தொடர்ந்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நாளை ‘பராசக்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தணிக்கை வாரியத்தின் முட்டுக்கட்டைகளால் படத்தின் வெளியீடு தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று சான்றிதழ் கிடைத்துள்ளது படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. சமூக விழிப்புணர்வு மற்றும் அரசியல் நையாண்டி நிறைந்த படமாக இது அமைந்துள்ளதால், திரையரங்குகளில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
