தலைநகர் ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக விலங்குகளின் இரத்தத்தை வர்த்தகம் செய்த கும்பலை போலீசார் கண்டறிந்துள்ளனர். கச்சேகுடா பகுதியில் செயல்பட்டு வரும் ‘சி.என்.கே’ (CNK) என்ற இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தில், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை மற்றும் ஹைதராபாத் நகர போலீசார் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது, சுமார் 1,000 லிட்டர் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளின் இரத்தம் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
உயிருள்ள விலங்குகளிடம் இருந்து இரத்தம் சேகரிக்கப்பட்டு, அவை ஹரியானாவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த இரத்தம் மருத்துவப் பரிசோதனைகளுக்காக அல்லது மருந்து தயாரிப்பு ஆராய்ச்சிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. தலைமறைவாக உள்ள நிறுவனத்தின் உரிமையாளர் நிகேஷை போலீசார் தீவிரமாகத் தேடி வரும் நிலையில், இந்த சட்டவிரோத வர்த்தகத்தின் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
