“அம்மா.. என்னைக் காப்பாத்துங்க!” … காலி ரயில் பெட்டிக்குள் நடந்த கொடூரம்…. பிழைக்க வந்த இடத்தில் பலியான சிறுவன்…. சென்னையில் பயங்கர சம்பவம்…!!

By Muthu Mani on சித்திரை 1, 2026

Spread the love

வேலை தேடி மத்தியப் பிரதேசத்திலிருந்து சென்னை வந்த சிறுவன், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் 27-ம் தேதி டீ குடிக்கச் சென்றபோது, இரண்டு பேர் அந்தச் சிறுவனை ஏமாற்றி ஆளில்லாத ரயில் பெட்டிக்குள் அழைத்துச் சென்று இந்த கொடூரத்தைச் செய்துள்ளனர். இதில் கடுமையான காயமடைந்த சிறுவன், ரயில்வே போலீசாரால் மீட்கப்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

சுமார் 4 மாதங்களாகத் தீவிர சிகிச்சை பெற்று வந்த சிறுவனின் உடல்நிலை மோசமடைந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சிறுவன் உயிருடன் இருந்தபோது மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகளின் முன்னிலையில் அவனது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தற்போது சிறுவன் உயிரிழந்துவிட்டதால், இந்த வழக்கை போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை பிரிவுகளுடன் ‘கொலை வழக்காக’ மாற்றி ரயில்வே போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தலைமறைவாக உள்ள அந்த இரண்டு குற்றவாளிகளையும் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

   

மக்கள் நடமாட்டம் மிகுந்த சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே இத்தகைய கொடூரமான சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தையும், பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இச்சம்பவம் குறித்துச் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் பாதுகாப்புப் பணிகளைப் பலப்படுத்தவும், சிசிடிவி கண்காணிப்பை அதிகரிக்கவும் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.