மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருவெண்காட்டில் நேற்றிரவு நடைபெற்ற ஒரு திருமண ஊர்வலம், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பெரும் போர்க்களமாக மாறிய சோகம் அரங்கேறியுள்ளது. மணமக்கள், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியுடன் திருவெண்காடு சாலை தெருவில் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திருவெண்காட்டில் இருந்து மேலையூர் நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று, சாலையின் இருபுறமும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததையும் பொருட்படுத்தாமல், கட்டுப்பாட்டை இழந்து ஊர்வலத்திற்குள் அதிவேகமாக புகுந்து பயங்கர விபத்தை ஏற்படுத்தியது.
இந்த எதிர்பாராத கொடூர மோதலால் ஊர்வலத்தில் சென்றவர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர். காரின் சக்கரம் ஏறியதிலும், மோதிய வேகத்திலும் சம்பவ இடத்திலேயே பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து அலறினர். இந்த விபத்தில், ஊர்வலத்தில் கலந்து கொண்ட திமுக ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார், ஹரீஷ், தமிழ்ச்செல்வன், ராஜாமணி உள்ளிட்ட 13 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினர். மகிழ்ச்சிக் குரல்களால் நிறைந்திருந்த திருமண வீதி, நொடிப் பொழுதில் மரண ஓலங்களாலும் ரத்தக் கறைகளாலும் நிறைந்து, காண்போரைக் கலங்கச் செய்யும் கோரக் காட்சியாக மாறியது.
விபத்து நடந்த உடனே அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் திருமண வீட்டார் சற்றும் தாமதிக்காமல் மீட்புப் பணிகளில் களமிறங்கினர். படுகாயமடைந்தவர்களை மீட்டு, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனை மற்றும் மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோட முயன்றதால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் காரைத் துரத்திச் சென்று வளைத்துப் பிடித்து, அதன் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர்.
காரை ஓட்டி வந்த நபரைக் கீழே இறக்கியபோது, அவர் மிகக் கடுமையான மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் திருவெண்காடு ஆண்டிதோப்பு பகுதியைச் சேர்ந்த தினேஷ் வயது 35 என அடையாளம் காணப்பட்டார். மதுபோதையில் வாகனத்தை இயக்கி 13 பேரின் உயிரோடு விளையாடிய தினேஷிற்கு பொதுமக்கள் ‘தர்மஅடி’ கொடுத்து, பின்னர் திருவெண்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தினேஷைக் கைது செய்த போலீசார் காரைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் தொடராமல் இருக்க அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
