தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக களத்தில் இறங்கி பணியாற்றி வருகின்றன. குறிப்பாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் இந்த முறை அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். அதேசமயம் அதிமுகவில் இபிஎஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து தொடர்ந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் இபிஎஸ் தீவிரம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பக்க நாடு மாதேஷ் ஏற்பாட்டில் இருப்பாளி ஊராட்சி, செவிடனூர் திமுக கிளைச் செயலாளர் ராஜா தலைமையில் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவருடைய இல்லத்தில் நேரில் சந்தித்து அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.
