தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய தேர்தல் பரப்புரை உரை பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் “மக்களைக் காப்போம்.. தமிழகத்தை மீட்போம்” என்ற முழக்கத்துடன் பிரசாரம் மேற்கொண்ட அவர், தற்போது அமைந்துள்ள கூட்டணி என்பது வெறும் தேர்தலுக்கானது மட்டுமே என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகள் தங்களின் தனிப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் செயல்படலாம் எனக் குறிப்பிட்டிருப்பது, வெற்றிக்குப் பிறகு பாஜக உள்ளிட்ட கட்சிகளை அவர் கழற்றிவிடக்கூடும் என்ற விவாதத்தை அரசியல் வட்டாரத்தில் கிளப்பியுள்ளது. தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா போன்ற பாஜக மேலிடத் தலைவர்கள் தொடர்ந்து கூறி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சு அவர்களுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என்பதை வலியுறுத்திய அவர், அதிமுக தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைப்பதையே இலக்காகக் கொண்டுள்ளதாக மறைமுகமாக உணர்த்தியுள்ளார். குறிப்பாக, “தேர்தலுக்குப் பின் கூட்டணிக் கட்சிகள் தங்கள் விருப்பப்படி செயல்படலாம்” என்ற அவரது கருத்து, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜகவுடனான உறவைத் துண்டித்துக்கொள்ளும் ஒரு திட்டமிட்ட நகர்வாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
